விஞ்ஞான முறையும், விஞ்ஞான ஆராய்ச்சியும் தமிழகத்துக்குப் புதியன அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் விஞ்ஞானிகள் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் மனித சமுதாயத்திற்குச் செய்திருக்கும் நன்மை அளவற்றது. அவர்கள், மக்கள் அனைவரும் நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கான - இன்பத்துடன் வாழ்வதற்கான- துன்பங்களிலிருந்து கரையேறுவதற்கான- வழிகள் பலவற்றைக் கண்டறிந்தனர்; உண்மைகள் பலவற்றை ஆராய்ந்து தெளிந்தனர். அவர்கள் கண்டறிந்த உண்மைகளை மனித சமுதாயம் அனுபவிக்கும்படி செய்தனர். அவர்கள் கண்டறிந்த விஞ்ஞான ஆராய்ச்சியையும் பலனையும் மனித சமுதாயம் இன்றும் அனுபவித்துக் கொண்டு வருகிறது.
இன்றைய விஞ்ஞானிகளும் மனித சமூகம்- உலகம்- முன்னேறுவதற்கான பல உண்மைகளைக் கண்டுபிடித்துத்தான் இருக்கின்றனர். ஆயினும் மனிதப் பூண்டே இல்லாமல் நாசம் ஆக்கி அழித்துவிடக்கூடிய- உலக நாகரிகத்தையே பாழாக்கி விடக்கூடிய- உலகத்தையே சுட்டுச் சாம்பலாக்கி விடக்கூடிய-கொடுமையான அழிவுச் சக்திகளையும் கண்டுபிடித்திருக் கின்றனர். இத்தகைய சக்தியுள்ள எறிகுண்டுகள், வெடிகுண்டுகள் முதலியன செய்யப்பட்டுள்ளன. இன்றைய விஞ்ஞானிகளின் இத்தகைய கண்டுபிடிப்புகளால் இன்றைய உலகம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. இதனால் உலக மக்களிடையே அச்சம், நடுக்கம், ஒருவரை ஒருவர் நம்பாமை, வாழ்விலே அவநம்பிக்கை, எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பீதி- இவை பிறந்து பேயாட்டம் ஆடுகின்றன.